நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழு உருவப் படம் திறப்பு…

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப் படம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறக்கப்பட்டது.

பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாஜ்பாயின் முழுஉருவப் படத்தை திறந்துவைத்தார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நீண்ட அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரரான வாஜ்பாய், பெரும்பாலான காலத்தை எதிர்க்கட்சி வரிசையில் செலவிட்டவர் என்று குறிப்பிட்டார்.

எந்த நிலையிலும் கொள்கைகளில் இருந்து ஒருபோதும் மாறாத வாஜ்பாய், பொதுநலனுக்காக அயராது பாடுபட்டவர் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டினார்.

எதிர்க்கட்சிகளை விமர்சித்தவர் என்றாலும், இதயத்தில் எதிர்க்கட்சிகள் மீது எவ்வித வெறுப்பும் இல்லாதவர் என்பதற்காகவே வாஜ்பாய் நினைவுகூரப்படுவார் என காங்கிரஸ் சார்பில் பேசிய குலாம்நபி ஆசாத் குறிப்பிட்டார்