கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலத்தின் தூண் முற்றிலும் இடிந்து விழுந்தது..


கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளது.

திருச்சி முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியிலிருந்து 2.34 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு 67,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சேலம் மேட்டூர் அணையிலிருந்து 1.90 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் நீர் தொட்டு சென்றுக்கொண்டுள்ளது. கொள்ளிடம் ஆறு பார்ப்பதற்கு கடல் போல காட்சியளிக்கிறது
கொள்ளிடம் ஆற்றின் மீது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் தற்போது உடையும் நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு 18வது தூண் மற்றும் 19வது தூண் இரண்டு சரிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

தற்போது 20ம் எண் தூணும் ஆற்றில் மூழ்க தொடங்கியுள்ளது. இரவு நேரத்தில் பாலம் இடிந்து விழுந்தததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதன் உறுதித்தன்மை குறைந்ததால், கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பழைய பாலத்திற்கு அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.