பாஸ்போர்ட்டில் வருகிறது அதிரடி மாற்றங்கள்: இனி முகவரி சான்றாக பயன்படுத்த முடியாது..


2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதனால் சோதனையின் போது பார்கோர்டை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும் எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை நீக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

முகவரி அடங்கிய பக்கத்தை நீக்கும் பட்சத்தில் அதனை இனி முகவரி சான்றாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். பழைய பாஸ்போர்ட்டுகளில் முகவரி பக்கம் அடங்கியிருந்தாலும், அதன் ஆயுட்காலம் முடிந்து புதுப்பிக்கும் போது, முகவரி பக்கம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்திய அரசு தரப்பில் மூன்று நிறங்களில் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணி அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அரசு பணிக்காக செல்பவர்களுக்கு வெள்ளை நிறத்திலான பாஸ்போர்ட்டும், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிற பாஸ்போர்ட்டும், பிற மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட்டும் வழங்கப்படுகிறது. குடிமக்களுக்கு நீல நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது,

இந்நிலையில், குடியுறவு சோதனை தேவை நிலையில் உள்ள பாஸ்போர்ட்களை ஆரஞ்சு நிரத்தில் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாஸ்போர்ட்கள் புனே நகரில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகம் வடிவமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன..