பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 89-வது பிறந்தநாள்..

புரட்சிகரமான பகுத்தறிவுக் கருத்துகளை தன் பாடல்கள் மூலம் பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தவர் படுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

மறைந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு இன்று 89வது பிறந்தநாள். அமரத்துவம் மிக்க அவரது பாடல்கள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

பட்டுக்கோட்டையாரின் திரைக்கவிதைகள்

தஞ்சை மாவட்ட கிராமம் ஒன்றில் சாதாரண எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கல்யாணசுந்தரம். பட்டுக்கோட்டை என்ற ஊர்ப்பெயரை சேர்த்துக் கொண்டு திரைப்படத் துறையில் தமது கவிதைகளை அரங்கேற்றியவர்.

திராவிட இயக்கத்திலும் இடதுசாரி முற்போக்கு இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமது திரைப்படப் பாடல்களில் அவற்றை பிரதிபலித்தார்.

சாதாரண மக்களின் ஆசைகளையும் ஏக்கங்களையும் பாடல்களில் பிரதிபலித்த அவர், மிகப்பெரிய லட்சியங்களையும் கொள்கைகளையும் பாடல்கள் மூலம் மக்கள் மனங்களில் விதையாகத் தூவினார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை மிகவும் ரசித்த எம்ஜிஆர் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை வழங்கினார். இதில் பல அற்புதமான பாடல்கள் பிறந்தன.

ஆனால் எதிர்பாராமல் 29 வயதிலேயே 5 மாதப் பெண் குழந்தையை தவிக்க விட்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உடல்நல பாதிப்பால் காலமானார்.

அவருக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கலையுலகமே இருட்டாகிவிட்டதாக கண்ணீர் சிந்தினார்.

எளிமையான சொற்களில் அற்புதமான கருத்துகள் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இன்றும் மக்களின் மனங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.