பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2014-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து,

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடந்த 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன், நாராயணன், மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர் தாக்கல் செய்தனர்.

அதில், 7 பேரை விடுவிப்பது தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த மனுவை 2014-ம் ஆண்டில் விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம், மூலவழக்கின் விசாரணை முடிந்த பிறகு, இந்த மனுவை விசாரிக்கலாம் எனத் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட அனைவரும் வழக்கு தொடரத் தொடங்கினால், வழக்குகள் தேக்கமடையும் எனக் கூறி, விசாரணையை நிலுவையில் வைத்தார்.

இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பான மூல வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுவை காலை 10. 45 மணிக்கு விசாரிக்கிறது.