“ஃபீனிக்ஸ் மாலில் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா” -: சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் 30ந் தேதி வரை 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் பலர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டுக்குச் சென்றவர்கள் எனத் தெரிய வந்ததும், அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டெல்லி மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பியவர்களில் 110 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தொற்று தொடர்பாக அவ்வப்போது தகவல்களை வழங்கி விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு பின்வருமாறு :

வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் அமைந்துள்ள lifestyle-ல் பணியாற்றிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கவனமுடன் இருக்கவேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் : 044 2538 4520 & 044 4612 2300

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.