பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வது சட்டவிரோதமானது : மத்திய சுகாதாரத்துறை ..

ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவிற்கு மருந்து கண்டறியப்படுமா என ஆவலுடன் எதிர்நோக்கி வரும் நிலையில், இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றை குணப்படுத்தும் நோக்கில் பிளாஸ்மா சிகிச்சை முறையை பரிட்சார்த்த முறையில் சோதித்து வருகிறது.

பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?

பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவிலிருந்து குணமடைந்தவரின் ரத்தத்தில் தொற்றை எதிர்த்து போரிடும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் என்பதால் உள்ள பிளாஸ்மாவை பிரித்து அதனை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உடலில் ஏற்றும் முறையே.

இது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது.
இதனிடையே பிளாஸ்மா சிகிச்சை முறை பாதுகாப்பானதா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் முக்கிய தகவல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

பிளாஸ்மா சிகிச்சை உட்பட கொரோனாவிற்கென இதுவரை அங்கீகரிக்கப்பட்ட எந்த சிகிச்சை முறையும் கிடையாது

பிளாஸ்மா சிகிச்சை சோதனையளவில் தான் உள்ளது, இருப்பினும் இது அங்கீகரிக் கப்படவில்லை, தேசியளவில் இதன் பலாபலன் தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது

இந்த ஆராய்ச்சிகளை ஐசிஎம்ஆர் நிறைவு செய்து அறிவியல்பூர்வ ஆதாரத்தை உறுதிப்படுத்தும் வரை பிளாஸ்மா சிகிச்சை சோதனையளவில் மட்டுமே இருக்க வேண்டும்

சோதனை அல்லது பரிட்சார்த்த முறையில் பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தப்பட வேண்டும்

சரியான முறையில், வழிகாட்டுதல்களை பின்பற்றி பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் அது நோயாளியின் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தலாம்,

அங்கீகரிக்கப்படாத காரணத்தால் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வது சட்டவிரோதமானது
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார்.