பிளஸ் 1 பாடத்திட்டத்தில் குறைப்பு: தமிழக அரசு உத்தரவு…

கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 6 பாடங்களுடன் இருந்த பிளஸ் 1 பாடத் திட்டம், இந்தக் கல்வியாண்டு முதல் 5 பாடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்பில் புதிய பாடத்திட்ட முறையை 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மைப் பாடங்களில் 3 பாடங்களை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம்.

இதையடுத்து மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடத் தொகுப்பைத் தேர்வு செய்யப் பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும்.

மேலும், புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

இதற்கிடையே சில தனியார் பள்ளிகள், விதிகளை மீறிச் சேர்க்கையை முடித்துவிட்டு புதிய பாடத் தொகுப்புக்கு அனுமதி கோருவது போன்ற நிகழ்வுகள் கடந்த கல்வியாண்டில் நடைபெற்றன.

எனவே, புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் எந்தப் பள்ளியும் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது.

மேலும், தொடர் அங்கீகாரம் காலாவதியான பள்ளிகளுக்கும் புதிய பாடத்தொகுப்புக்கான அனுமதியைத் தர முடியாது’’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.