தமிழக பூத்கமிட்டி முகவர்களுடன் காணொலி மூலம் உரையாடிய மோடி: திமுக, காங்கிரஸ் மீது கடும் சாடல்

தமிழக பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாடினார். 

என் வாக்குச் சாவடி வலிமையான வாக்குச் சாவடி என்ற தலைப்பில் வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், திருச்சி, மதுரை வாக்குச்சாவடி முகவர்களுடன் அவர் காணொலி மூலம் உரையாடினார்.

5 மாநிலத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த பாஜக அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்பாடு பட்டேனும் வெற்றியைத் தக்கவைக்க முடிவெடுத்துள்ளது. தற்போதைய பாஜக என்பது மோடியும், அமித்ஷாவும் தான். அந்த வகையில், அமித்ஷாவின் பாணியில் பூத் கமிட்டி லெவலுக்கு இறங்கி அடிக்க இருவரும் முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கி முடுக்கி விட்டுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கும், மோடிக்கும் எதிராக கடும் வெறுப்புணர்வு நிலவுகிறது. இதனை எதிர்கொள்ள பூத் கமிட்டி முகவர்களை தற்போதில் இருந்த தயார் செய்து வருகிறது பாஜக. அதன் ஒரு பகுதியாக சென்னை, திருச்சி, மதுரை நகரங்களின் பூத் கமிட்டி முகவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் உரையாடினார். அது நமோ ஆப் உள்ளிட்ட பாஜகவின் பல்வேறு சமூக வலைத்தள சாதனங்கள் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. 

இந்த உரையாடலின் போது, திமுகவையும், காங்கிரசையும் கடுமையாக பிரதமர் மோடி சாடியுள்ளார். மெகா கூட்டணி என்று சில தலைவர்கள் பேசி வருவதாகவும், அவர்கள் கொள்கை அடிப்படையில் கூட்டணி சேரவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். அதிகாரத்தை கைப்பற்றவும், தங்களது இருப்புக்காகவுமே அவர்கள் கூட்டணி சேர்வதாகவும் பிரதமர் மோடி சாடியுள்ளார்.

அதிமுகவைப் பொறுத்தவரை பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் நிலையில், பாஜகவின் இத்தகைய அதிரடி வியூகத்தை எதிர் கொள்ள திமுக தயாராக உள்ளதாக என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.