பாமக நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு: ஸ்டாலின்..


பாமக சார்பில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 6 வாரகால கெடுவுக்குள் அதை அமைக்காமல் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்ற மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

அதிமுக, பாஜக தவிர எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று போராட்டம் நடத்துகின்றன. இந்தப் போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுகவை கடுமையாக விமர்சித்த பாமக திமுகவுக்கு ஆதரவளித்தது. அதேபோல் பாமகவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, வரும் 11-ம் தேதி அன்று பாமக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு, திமுக ஆதரவளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், அரசியல் பாகுபாடின்றி தமிழகத்தின் ஒருமித்த குரல் மத்திய அரசுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் திமுக, பாமக  சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு, தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.