பொலிவியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆக பதிவு..


தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், “தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பராகுவே எல்லை ஓரத்தில் 562 கிலோமீட்டர் ஆழத்திற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாட்டின் பல இடங்களில் உணரப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வீடுகளிலிருந்து வெளியேறி சாலைக்கு ஓடி வந்ததாகவும். பொலிவியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுதான் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் குறித்து பொலிவியாவில் வசிக்கும் வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, “நான் லேசான நிலநடுக்க உணர்வை உணர்ந்தேன். ஜன்னலில் போடப்பட்டிருந்த திரை அதிர தொடங்கியது. உடனடியாக நானும் பிற ஊழியர்களும் அலுவலகத்திலிருந்து வெளியேறி விட்டோம்” என்றார்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளி வரவில்லை.