பொள்ளாச்சி பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட, கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட, கோவை காவல் கண்காணிப்பாளர்  பாண்டியராஜன் மீது

ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விசாரிக்கபட்டு வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்,

பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையும் வெளியிட்டார். அதேபோல, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்த நடவடிக்கை இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், கோவை மாவட்ட எஸ்.பிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

அவருக்கு எதிரான புகாரில் கோவை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மனுதாரர் டி.ஜி.பிக்கு அனுப்பிய கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றத்தை நாட முடியாது எனவும்,

முதலில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது போன்ற வழக்குகளில் உயர்நீதிமன்றம் நேரடியாக விசாரணைக்கு உத்தரவிட முடியும் என வாதிட்டார்.

இதனையடுத்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., பாண்டியராஜன்,

உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.