பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து மேலுாரில் சாலை மறியல்..

மதுரை மாவட்டம், மேலூர் அருகே பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்து வாட்ஸ் அப்பில், அண்மையில் ஆடியோ வெளியானது. இதுதொடர்பாக, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து, மதுரை மாவட்டம் மேலூர் அருகே, சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், முனிக்கோவில் என்ற இடத்தில், ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில், மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல் நடைபெற்றது.

பொன்னமராவதி சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.