மின்தடையால் 5 பேர் பலியான விவகாரம் : நிலை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு..

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெர்ணிகா மேரி, குரு சங்கர் ஆகிய இருவர் தனித்தனியே பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கடந்த 7ம் தேதி மழை காரணமாக மின்தடை ஏற்பட்டதால் 5 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், அன்றைய தினம் மதுரையிலுள்ள வேறெந்த மருத்துவமனையிலும் இத்தகைய சம்பவம் நிகழவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அரசு அதிகாரிகள், மருத்துவர்களின் அலட்சியப் போக்கே உயிரிழப்புக்கு காரணம் எனவும்,

இது குறித்த விசாரணைக்கு வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைப்பதோடு, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதிகள், இந்த சம்பவம் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதனிடையே, 5 நோயாளிகள் பலியானது குறித்து விளக்கம் கேட்டு மருத்துவ கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.