ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும்: #Me too சர்ச்சை குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து

 

ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும் என #Me too சர்ச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரமேலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

 

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சத்தித்த அவர் கூறியதாவது:

 

மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கட்சி நிர்வாகிகளுக்கு பல அறிவுறைகள் வழங்கப்பட்டன. மகளிர் அணி எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு தேமுதிக மகளிரணி உதாரணமாக உள்ளது. மேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை வெகு விரைவில் வெளிநாடு அழைத்து செல்ல இருக்கிறோம். அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.  சிகிச்சைக்குப் பின் விஜயகாந்த் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்.

 

#Me too தற்போது மிகப்பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பெண்கள் ஆக்கப்பூர்வமாக அதைப் பயன்படுத்த வேண்டும். சர்ச்சைகளுக்காக பயன்படுத்தக்கூடாது.  ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும். இதனால் பெண்கள் சரியாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை தேமுதிக ஏற்கனவே வலுவாக உள்ளது. மேலும் கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதி. கட்சியிலிருந்து ஒருசிலர் வெளியேறிவிட்டதால் தேமுதிக பலம் குறைந்துவிடவில்லை. கட்சி தொடங்கியது முதல் தேமுதிகவில் இருந்த அதே உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதும் குறையாமல் உள்ளது.

 

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

Premalatha Vijayakanth About #Metoo