“குடியரசுத் தலைவர் யாரென்றே தெரியாதவர் ஆசிரியர் தேர்வில் ‘‘டாப்பர்’ : உ.பி-யில் அரங்கேறிய மாபெரும் முறைகேடு!..

உத்தர பிரதேச மாநிலத்தில் உதவி ஆசிரியர் தேர்வில் மாபெரும் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 69,000 உதவி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடைபெற்றன.

இந்தத் தேர்வில், ராகுல் என்ற விண்ணப்பதாரர் தன்னை பணியில் சேர்ப்பதாகக் கூறி சிலர் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக போலிஸாரிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் பிரயாக்ராஜ் போலிஸார் விசாரணை மேற்கொண்டு கே.எல்.படேல் என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தர்மேந்திர படேல் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தர்மேந்திர படேல் இந்தத் தேர்வில் 95 சதவீத மதிப்பெண்ணுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்படவர்களிடம் விசாரித்தபோது அதிகாரிகள் அவர்களிடம் எளிதான பொது அறிவுக் கேள்விகளைக் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் அவற்றிற்கு பதில் அளிக்கத் திணறியுள்ளனர்.

அவர்களை விசாரித்தது குறித்துப் பேசியுள்ள ஒரு போலிஸ் அதிகாரி, “பொது அறிவு குறித்த அடிப்படை கேள்விகளுக்கே இவர்களிடம் பதில் இல்லை.

உதாரணமாக இந்தியாவின் குடியரசுத் தலைவர் யார் என்று தெரியவில்லை. இதன் மூலம் முறைகேடு நடைபெற்றது உறுதியாகியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

உதவி ஆசிரியர்கள் பணிகான தேர்வில் 95% மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் பெயரே தெரியாத அவலம் அம்பலமாகியுள்ளது.

இவர் ஆசிரியர் பணிக்குச் சென்றால் மாணவர்களின் கல்வி எந்த நிலையில் இருக்கும் என கற்பனை செய்யவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.