பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி


மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யபட்டு சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் .

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தபின் சாத்தூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட்டு கீதா, நிர்மலாதேவியை நேற்று (மே 9) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன்பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்மலாதேவியின் காவல் முடிவடைந்ததையொட்டி, நேற்று மதுரை மத்திய சிறையில் இருந்து போலீசாரால் வேனில் கொண்டுவரப்பட்டு விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கமான கோர்ட்டு நடைமுறைக்கு பின்னர் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, நிர்மலாதேவியை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீசார் அவரை மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

இந்த நிலையில் நிர்மலாதேவியின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலாவது மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யபட்டது. இதற்கு அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 18 ந்தேதிக்கு தள்ளி வைக்கப்ப்பட்டு உள்ளது.