பொதுத்துறை வங்கி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம் –

இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை 5 வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், சில வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க ஆட்சியில் அரசின் முக்கிய துறைகள் தனியார்மயமாகி வரும் நிலையில், தற்போது ஒருசில பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வாராக்கடன் பிரச்னையால் பெரும்பாலான வங்கிகள் தவித்து வருகின்றன. இதனால் கடந்த ஏப்ரலில், நலிந்த பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாக யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக்கப்பட்டன.

தற்போது 12 பொதுத்துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கையை மேலும் குறைத்து 5 வங்கிகளாக்க மத்திய பா.ஜ.க அரசு முடிவுசெய்துள்ளது. மேலும், பொதுத்துறை வங்கிகளின் பெருமளவு பங்குகளை தனியாருக்கு விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வங்கித் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்காக புதிய தனியார்மயக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதுகுறித்து அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, மஹாராஷ்டிரா வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி ஆகிய வங்கிகளின் பெருமளவு பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க அரசின் தனியார்மயக் கொள்கை, நாட்டையே பின்னுக்குத் தள்ளும் எனவும், கார்ப்பரேட்களுக்காகவே தனியார்மய முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகளும், பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.