புதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு : மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது.

2000 -காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இங்கு புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 காளைகள் கலந்து கொள்ள உள்ளன.

500 மாடு பிடி வீரர்கள் களம் இறங்க உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2 கார்கள், 9 மோட்டார் சைக்கிள்கள்,

700 சைக்கிள்கள், தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், கட்டில்கள், பீரோக்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டை 20,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட் டுள்ளன.

இதுதவிர, காயமடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்காக விராலிமலை அரசு மருத்துவமனை

மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே இங்கு அதிகமான காளைகள் கலந்துகொள்ள உள்ளதால் இந்த ஜல்லிக்கட்டை உலக சாதனையில் இடம்பெறச் செய்வதற்காக கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழு வருகை தந்துள்ளது.

இந்நிலையில், இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 5 மணி நேரத்தில் 647 மாடுகள் வாடிவாசலை கடந்ததே உலக சாதனையாக இருந்ததாகவும்,

இன்று விராலிமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 800 மாடுகள் வாடிவாசலை கடந்து உலக சாதனையை படைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவில் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என மதிப்பீட்டளார்கள் மார்க் மற்றும் மெலடியா குழுவினர் அறிவித்துள்ளனர்.

விராலிமலை ஜல்லிக்கட்டில் காளை பாய்ந்து மணப்பாறை சொரியம்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் ராமு என்பவர் பலியானர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதால், திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எனும் ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 43) என்பவரை சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

விராலிமலை உலக சாதனைக்காக நிகழ்த்தப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்வைப் பொதுமக்கள் பார்க்கும் வகையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வாகனங்களில் உள்ள பெரிய திரையில் திரையிடப்படுகின்றன.