QR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…

கரோனா கிருமிப் பரவல் அச்சத்தால் வழக்கமான வாழ்க்கை முறை பெரிதும் மாற்றம் கண்டு வருகிறது. ஆனால், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை ஓரளவுக்கு மேல் தள்ளிப்போட முடியாது.
ஆனால், ஊரடங்கு காலத்தில் அழைப்பிதழ்களை வழங்கவோ, விசேஷங்களுக்குச் செல்லவோ இயலாத சூழல். அஞ்சல் வழியாக அனுப்பலாம்.

சிலர் வாட்ஸ்அப் வழியாக அழைப்பிதழ்களை அனுப்பி விடுகின்றனர். ஆயினும் நேரில் சென்று அழைப்பதைப் போன்ற உணர்வை உருவாக்க நினைத்தனர் கோவையில் உள்ள திருமண அழைப்பிதழ் அச்சிடும் நிறுவனங்கள்.

அந்த முயற்சியில் அழைப்பிதழ்களில் 2 QR குறியீடுகளைச் சேர்த்தனர். ஒன்று அழைப்பிதழின் மேலும் மற்றொன்று அழைப்பிதழின் உள்ளேயும் இருக்கும்.

வெளியே இருக்கும் குறியீட்டை கைபேசியில் ஸ்கேன் செய்தால், விசேஷ வீட்டுக்காரர்கள் அழைப்பிதழ் வழங்கும்போது கூற விரும்புவதைப் பதிவு செய்த காணொளியைப் பார்க்கலாம்.

அழைப்பிதழின் உள்ளே உள்ள குறியீட்டை கைபேசியில் ஸ்கேன் செய்தால் திருமணத்தை இணையம் வழி காணலாம். திருமணத்தன்று பார்க்க முடியாவிட்டால், நேரம் கிடைக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்.

கைபேசிகளுக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பலாம்.

அது மட்டுமல்ல; திருமணத்திற்கு மொய் எழுத விரும்புவோருக்காக, வங்கிக் கணக்கு எண்ணும் வழங்கப்படும்.

சூழலுக்கேற்ப மாற்றங்களைத் தழுவினால் மட்டுமே வளர்ச்சி காண முடியும் என்பதை அறிந்து மேற்கொண்ட புத்தாக்க நடவடிக்கை இது என்கின்றனர், இத்தகைய சேவையைப் பயன்படுத்திய சிலர்.