ரபேல் ஒப்பந்தம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிப்பது மோடியின் கடமை: ஸ்டாலின்…

ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதற்காக இந்திய அரசு சார்பில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே மத்திய அரசு பரிந்துரைத்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹாலண்டே கூறுகையில் “பிரான்ஸ் நாட்டின் ரபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.

யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸுக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியைத் தருவதாக வாக்குறுதி அளத்தார்.

ஆனால், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்துள்ள பேட்டி ரபேல் விமானப் போர் ஒப்பந்தத்தில் உள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து இந்திய மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார். இதன் உண்மை நிலையை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.