காங்., தலைவராகிறார் ராகுல் : விரைவில் அறிவிப்பு..


காங்கிரஸ் கட்சியின் உயர் முடிவுகளை எடுக்கக்கூடிய காரிய கமிட்டி கூட்டம் திங்கட்கிழமை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடக்கிறது. அக்கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பு வகித்து வரும் சோனியா காந்தி காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமே கட்சியின் தலைமையை ராகுலிடம் ஒப்படைப்பதுதான் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை ராகுல்காந்தி மட்டுமே போட்டியின்றி நியமன பதவியிலேயே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி தலைவர் தேர்தலுக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஒரு வழக்கமான காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை. சோனியா காந்தி கட்சி தலைவர் தேர்தலுக்கு கட்சியின் ஒப்புதலை பெறவேண்டும் என்று முடிவெடுத்ததாலேயே இந்த கூட்டம் நடைபெறுகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.