சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என ரஜினி பேட்டி: அடுத்த படத்தின் விளம்பரத்திற்கு அடிப்போடுவதாக நெட்டிசன்கள் விமர்சனம்

சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கால்நூற்றாண்டாக தனது அரசியல் பிரவேசம் இதோ, அதோ என ரசிகர்களுக்கு போக்குக் காட்டி வருவதால் கடுப்பான ரஜினியின் ரசிகர்கள், அடுத்த ஓட்டு ரஜினிக்கே என தேர்தல் நேரத்தில் ட்விட்டரில் பதிவிட்டு ட்ரெண்டிங் ஆக்கிவிட்டனர்.  

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ரசிகர்களின் ஆர்வம் புரிவதாகவும் அவர்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன் என்றும் ரஜினி பதில் அளித்தார். இதே போல் சட்டப்பேரவை தேர்தல் வந்தால் எதிர்கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று ரஜினி பதில் அளித்தார்.

அடுத்து மீண்டும் மோடி ஆட்சி அமைப்பாரா என்கிற கேள்விக்கு மே 23ந் தேதி அது தெரிந்துவிடும் என்று கூறிய ரஜினி, ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாகவே இருந்ததாக குறிப்பிட்டார்.

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தேர்தலின் போது விரும்பத்தகாத சம்பவங்கள் குறைவாகவே நடைபெற்றுள்ளதாகவும் ரஜினி தெரிவித்தார்.

ஆனால், வழக்கமாக அவர் ரசிகர்களை ஏமாற்றுவதற்காக எப்போதும் போலவே ரஜினி இத்தகைய பதிலைக் கூறியிருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் வெளிவர இருப்பதால், ரசிகர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் தந்திரமாகவே அவர்களுக்கு அரசியல் ஆசை காட்டும் வகையில் ரஜினி இப்போதும் கூறியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.