நடிகர் என்பதால் எனைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினி நம்பிக்கை

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூற இன்று (30.05.2018 ) தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த். புறப்படும் முன்னர் சென்னையில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி செல்கிறேன். துன்பத்தில் இருக்கும் அவர்கள், நடிகன் என்பதால் எனைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிமுகவும், திமுகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்வது அரசியல். கடந்த காலங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை.

இவ்வாறு அவர் கூறினார். மக்கள் பிரச்சினை தொடர்பாக இதுவரை ட்விட்டரில் மட்டுமே கருத்துகளைப் பதிவிட்டு வந்த ரஜினிகாந்த் முதல் முறையாக நேரில் களத்திற்கு செல்கிறார். ஆனால், உயிர்ப்பலிகளும், அது குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் நடந்து முடிவுக்கு வரும் நிலையில், காலா பட டீசரெல்லாம் வெளியிட்டு, பட வேலைகள் அனைத்தும் பக்காவாக முடிவடைந்த பின்னர் மிகவும் ரிலாக்ஸாகா ரஜினி களத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Rajini Goes to Tutukkudi