நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க புதிய சட்டம் : மத்திய அரசு முடிவு….

கங்கை முதல் காவிரி வரை உள்ள 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் -கர்நாடகா, கோவா-கர்நாடகா, டில்லி-அரியானா உள்பட பல்வேறு மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் வழக்குகளும் நீடிக்கின்றன.

இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் புதிய சட்டத்தை பார்லி.,ல் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதுள்ள நதிநீர் வாரியச் சட்டத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால், அதனை மாற்றும் வகையில் இந்த புதிய சட்டம் பார்லி குளிர்காலக்கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதிய சட்டத்தின்படி இருவேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களின் முதல்வர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

காவிரி, கங்கை, சிந்து, கோதாவரி, மகாநதி, மாஹி, நர்மதா, பெண்ணாறு, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நதிகள் பாயும் பகுதிகளில் டெல்டா வளர்ச்சிக் குழுக்கள் அமைக்கப்படும்.

இக்குழுக்கள் நதிநீர்ப்பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும், நதி பாயும் பகுதிகளில் வளர்ச்சி குறித்து விவாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போதுள்ள முரண்பட்ட சூழலை மாற்றி மாநிலஅரசுகள் பரஸ்பரம் ஒத்துழைக்கும் சூழலை இந்த அமைப்பு ஏற்படுத்தும் என்றும், முதல்வர்கள் ஆண்டுக்கு இருமுறை சந்தித்துப் பேசி இணக்கமான சூழலை ஏற்படுத்துவார்கள் எனவும் மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.