ஆர்.கே.நகரில் ரூ.100 கோடி அளவுக்கு பணப் பட்டுவாடா: மு.க.ஸ்டாலின் பேட்டி..

 


ஆர்.கே.நகரில் நேற்றைய தினம் பட்டப்பகலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 6,000 ரூபாய் வீதம் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன் எனவும், இடைத்தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் இன்று (17-12-2017) தலைமைச் செயலகத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை சந்தித்து, ஆளுங்கட்சியினர் மேற்கொண்டு வரும் தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பிலும், ஆளும் கட்சியிலிருந்து பிரிந்து இன்னொரு அணியாக போட்டியிடும் வேட்பாளரின் சார்பிலும் என்னென்ன அக்கிரமங்கள், அநியாயங்களை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி, இடைத்தேர்தல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திரு. விக்ரம் பத்ரா அவர்களை சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 20க்கும் மேற்பட்ட புகார் மனுக்களை வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, நேற்றைய தினம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்து, 11 புகார்களை கொடுத்திருந்தோம். ஏறக்குறைய 100 கோடி ரூபாய் பணம் ஆளும் கட்சியின் சார்பிலும், தினகரன் அணி சார்பிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுகுறித்தும் புகார் அளித்துள்ளோம்.
குறிப்பாக, ரூ.2 கோடி வைத்திருந்த ஒரு அதிமுகவை சேர்ந்த நபரை பிடித்து காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தால், அவரிடம் இருந்தது சில ஆயிரங்கள் மட்டும் தான் என்று காவல்துறை சார்பில் செய்தி வெளியாகிறது. இதையெல்லாம் காவல்துறை உயரதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால், அவர்கள் கண்டும், காணாமலும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அராஜகங்களை எல்லாம் மீறி, நேற்றைய தினம் மட்டும் ரூ.20 கோடி வைத்திருந்த அதிமுகவினரை, திமுக தோழர்கள் பிடித்து ஒப்படைத்தாலும், அவர்களை எல்லாம் விட்டு விடுகிறார்கள்.

இப்படி, ‘குதிரை பேர’ ஆட்சியின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, அதேபோல தினகரனும் சேர்ந்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் பட்டப்பகலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 6,000 ரூபாய் வீதம் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மேற்பார்வையில் தான் இது நடந்துள்ளது. அதுமட்டுமல்ல, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர் உள்பட பல அமைச்சர்களின் மேற்பார்வையில் வெளிப்படையாகவே பண விநியோகம் நடந்துள்ளது. இதுகுறித்து, காவல்துறை ஆணையரை பலமுறை தொடர்பு கொண்டு நாங்கள் புகாரளித்தோம். தொடர்ந்து, தொலைக்காட்சிகளில் இதுபற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இப்படி நடக்கிறதா என்று அவர் எங்களிடத்தில் கேள்வி எழுப்புகிறார். அதேபோல, தமிழக தேர்தல் ஆணையர் திரு. லக்கானி அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.

எனவே, தேர்தல் ஆணையமும், காவல்துறையும் இப்படிப்பட்ட அக்கிரமங்களுக்கு எல்லாம் திட்டமிட்டு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை எல்லாம் ஆதாரங்களோடு நாங்கள் இன்று புகார் மனுவாக தந்திருக்கிறோம். எங்கெல்லாம் பண விநியோகம் நடைபெற்ற இடங்களில் எங்களுடைய கழக தோழர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்கள். அந்த வீடியோக்களையும் ஒரு பென் ட்ரைவில் ஆதாரமாக இணைத்து புகார் மனு அளித்துள்ளோம்.

ஏற்கனவே ஒருமுறை, 89 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றது வருமான வரித்துறை சோதனையில் ஆதாரத்துடன் கிடைத்ததால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதில், தேர்தல் ஆணையமும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கிடைத்த தைரியத்தில் தான் இப்போது நடைபெறும் இடைத்தேர்தலில் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் அளவுக்கு பட்டவர்த்தனமாக, பட்டப்பகலில் பண விநியோகம் செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, இனி வரும் காலத்தில் அவர்கள் தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு அதிகாரி அவர்களிடம் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார்.