ஒரு கோடி சிறு விவசாயிகளுக்கு ரூ. 2000 கொடுத்துட்டோம்ல…: பிரதமர் மோடி பெருமிதம்

சிறுவிவசாயிகளுக்கு ரூ 6000 வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நேரடிப் பணப்பலன் கிடைக்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்ததற்கு நாடு முழுவதும் கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், அந்தத் திட்டம் துரித கதியில் நிறைவேற்றப் பட்டு வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர் கூறியதாவது:

விமானி அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது பெருமைக்குரியது . மும்பை தாக்குதலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கையை எடுத்த நமது ராணுவத்தினர் வணக்கத்திற்குரியவர்கள்.

புகழ்பெற்ற மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் நடுத்தர வர்க்கத்தினரை இழிவு படுத்தி பேசியவர். அவர், நீதிமன்ற படிகளில் ஜாமீன் கேட்டு ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.

அரிய வாய்ப்பை பற்றிக் கொண்டு அரிய செயல்களைச் செய்ய திருவள்ளுவர் அறிவுறுத்தியுள்ளார். துணிச்சல் மிக்க உறுதியான முடிவை எடுக்கவே இந்திய மக்கள் பெரும்பான்மையுள்ள அரசை தேர்ந்தெடுத்தனர். மக்கள் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையுமே விரும்புகிறார்கள். வாரிசு அரசியலை விரும்பவில்லை.

மத்திய ஆட்சியில் பங்கு வகித்த தி.மு.க தமிழகத்திற்கு செய்த நன்மைகள் என்ன?இலாகாவிற்காக தொலைபேசியில் பேசப்பட்ட பேரத்தை நாடே கேட்டதே…

பா.ஜ.க. தலைமையிலான அரசு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் விவசாயிகளுக்கு முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட திட்டம் 24 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிக நவீன ரயிலான தேஜாஸ் ரயில் மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட உள்ளது.  1964-ஆம் ஆண்டு புயலில் அழிந்த பாம்பன் ரயில் தடம் புதுப்பிக்கப்பட உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.