ஆா்.எஸ்.எஸ். அமைப்பு 3 நாட்களில் ராணுவத்தையே உருவாக்கும் : மோகன் பகவத்..


தேசத்துக்காக போரிட வேண்டியத் தேவை ஏற்பட்டால் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்கும் திறன் கொண்டது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, முசாபர்பூரில் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ராஷ்டிரீட ஸ்வயம் சேவக் சங்கமானது மூன்றே நாட்களில் ராணுவ வீரர்களை உருவாக்கும் திறன் கொண்டது. ராணுவம் 6 முதல் 7 மாத பயிற்சியில் செய்வதை சங்கம் மூன்றே நாட்களில் செய்துவிடும். அதுவே எங்களது திறமை. நாட்டுக்கு அப்படி ஓர் இக்கட்டான சூழல் ஏற்பட்டால், அரசியல் சாசனம் அனுமதித்தால் நாங்கள் நிச்சயமாக இதை செய்து முடிப்போம்.

ஆர்.எஸ்.எஸ். ராணுவமோ அல்லது துணை ராணுவமோ அல்ல ஆனால், ராணுவத்துக்கு நிகரான ஒழுக்க நெறிகள் இங்கே பின்பற்றப்படுகிறது. அதன் காரணமாக நாட்டுகாக உயிர் துறக்க சங்க உறுப்பினர்கள் எப்போதுமே தயாராக இருக்கின்றனர்” என்றார்.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை என அனைத்திலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.