சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களும் செல்ல அனுமதி : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கு அனுமதியில்லை.

பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பாலினச்சமத்துவத்துக்கு எதிரானது எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கில் தங்கள் பதிலைத் தெரிவித்த கேரள இடதுசாரி அரசு, பருவம் எய்திய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறோம் என்று கடந்த ஜூலை 18-ம் தேதி மனுத்தாக்கல் செய்தது.

அதேசமயம் முன்பு கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதிமுதல் 8-நாட்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். ஐந்து நீதிபதிகள் அமர்வில் 2 நீதிபதிகள் ஒன்றாகவும், மற்ற 3 நீதிபதகள் தனியாகவும் தீர்ப்பு அளித்தனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் ‘‘சபரிமலை கோயிலில் நீண்ட காலமாகவே பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள்.

வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் கட்டாயமாக அனுமதிக்க வேண்டும்.

கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்டவிரோதம்’’ எனக் கூறினார்.