ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்: ம.நீ.ம. கட்சி தலைவர் கமல் பேட்டி..

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .

ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

பின்னர், கட்சித் துணைத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் செய்தியார்களைச் சந்தித்தார். அப்போது மக்கள்நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் பேசியதாவது: ‘

தற்போது கமல்ஹாசன் தலைமையில் மக்கள்நீதி மய்யத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்ட முடிவில் எந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் கமலுக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .

தற்போதைய நிலவரப்படி யாருடன் கூட்டணி என்பது இதுவரை கட்சி முடிவு செய்யப்படவில்லை என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கமல்ஹாசன் பேசியதாவது: ‘
நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றி தற்போது சொல்ல முடியாது.
தமிழகத்தின் பிரச்னைகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்படும். தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி இல்லை.

அது உறுதி. மாறாக, ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம்.

கூட்டணியை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை நிர்வாகிகள் எனக்கு வழங்கியுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் பொறுப்பாளர்களை நியமிக்கும் பொறுப்பை மகேந்திரன் தொடங்குவார். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால் அதில் போட்டியிடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்’

இவ்வாறு அவர் தெரிவித்தார். விரைவில் கட்சிக்கூட்டணி பற்றி கமல் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.