சசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களுர் சிறையில் இருக்கிறார் சசிகலா.

இவரது குடும்பத்தினர் நடத்தி வரும் 9 போலி நிறுவனங்களின் 1, 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2017-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.

சசிகலா குடும்பத்தினர், 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பல நூறு கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கியது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் சிக்கின.

இதையடுத்து சசிகலாவின் உறவினர்கள், பினாமிகள் உட்பட பலரிடம், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சசிகலா குடும்பத்தினர் பினாமி பெயரில் நடத்தி வந்த 9 நிறுவனங்களுக்கு சொந்தமான, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரி அதிகாரிகள் கூறியுள்ளனர்.