ஆட்சியை கைப்பற்ற சசிகலா, தினகரன் வெறிபிடித்து அலைந்தனர் : அ.தி.மு.க. நாளேடு …


ஆட்சியை கைப்பற்ற வெறிபிடித்து அலைந்ததாக சசிகலா, தினகரன் மீது அ.தி.மு.க. நாளேட்டில் விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. நாளேடான ‘நமது அம்மா’ நாளேட்டில் சசிகலா மற்றும் தினகரனை விமர்சித்து வெளியான செய்தி வருமாறு:-

அன்னமிட்டு வளர்த்த இயக்கத்துக்கு கன்னமிட்டு கொழுத்த கும்பல்.. ஆற்றிய தொண்டு தான் என்ன…?

மக்கள் திலகத்தால் மலர்ந்த மாசற்ற இயக்கத்திற்கு மாபியா கும்பல் செய்திட்ட மகத்தான சேவை தான் என்ன?

பதவிகள் தருவதாக பணப் பறிப்பு… பணம் தர மறுப்போருக்கு பதவி பறிப்பு..

வேட்பாளர் தேர்வுக்கு கையூட்டு.. வேட்பாளருக்கு கொடுக்கும் பணத்தில் கை வைப்பு. புகாருக்கு உள்ளானவரை புனிதராக்க ஒரு ரேட்டு. புரட்சித்தாயின் பார்வைக்கு ஒருவரை கொண்டு சேர்க்க தனி ரேட்டு.

தாய் தேர்வு செய்வதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தாங்கள் பரிந்துரை செய்ததாக அறிவிப்பு வரும் முன்னே அறுவடை நடத்துவது. அம்மா விரும்புவோர் மீது அடுக்காத பழி போட்டு அழித்தும் ஒழிப்பது.

கப்பம் கட்டுவோரை அடைக்காத்து நிற்பது. அனுசரிக்க மறுப்போரை கட்டம் கட்டி அழிப்பது.

மண்ணுளி பாம்புகளாய் மறைந்திருந்து திருடியதை வெள்ளையாக்க மதுபான ஆலைகள் நடத்துவது.

மக்கள் செல்வத்தை திருடித்தான் கொழுத்தோம் என்பதை ‘மக்கள் செல்வர்’ என வெட்கமின்றி பட்டமிட்டு வெளிப்படையாய் சிரிப்பது.

ஒப்பில்லாத்தாயின் அதிகாரத்தை உறிஞ்சி கொழுத்தது. ஒரு நூறு தலைமுறைக்கும் எங்களிடம் ஏழை இல்லை என்பதை ஜாஸ் சினிமா வழியே சகலருக்கும் உரைப்பது.
மருத்துவமனையில் அம்மாவை வைத்து மர்மக் கதை புனைந்தது. மருத்துவ மேல் சிகிச்சைக்கு விடாமல் அரண் அமைத்து தடுத்தது.

‘முடியும் வரை காத்திருந்து’ தாங்கள் முடிசூடிக் கொள்வதற்கு முகூர்த்தம் குறித்தது. கட்சி-ஆட்சியை கைப்பற்ற அதிகார வெறி பிடித்து அலைந்தது. இப்படி வாரிக்கொடுத்த வள்ளல்களின் இயக்கத்திற்கு வழிப்பறிக் கும்பல் செய்ததெல்லாம் திருட்டும், புரட்டும், மிரட்டும், சுருட்டும் தானே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.