’சத்தியமா விடவே கூடாது :’ சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினி ஆவேசம்..

சத்தியமா விடவே கூடாது என்று ஹேஷ்டேக் மூலம் ரஜினிகாந்த் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

இதற்கிடையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்டனர்.

நீதித்துறை நடுவரை காவலர் மிரட்டிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் இது தொடர்பாக ரஜினிகாந்த் பதிவிடுள்ள ட்வீட்டில், சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும், விடவே கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சத்தியமா விடவே கூடாது என்று ஹேஷ்டேக் மூலம் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.