சவுதி அரேபியாவில் சினிமா மீதான தடை நீக்கம் …


கடந்த 35 ஆண்டுகளாக சினிமாப் படங்கள் காட்டப்படும் திரையரங்குகளை ஆபாசம் என்றும் பாவச்செயலாகவும் கருதி அனுமதிக்க மறுத்த சவுதி அரேபியா அரசு சினிமாக்களை அங்கு திரையிட தடை விதித்துள்ளது.

இஸ்லாமிய கலாச்சாரத்தையும் மத அடையாளத்தையும் சினிமா சீர்குலைத்து விடும் என்று அங்குள்ள மத தலைவர்கள் கருதியதால் இந்த தடை நீக்கப்படாமல் இருந்தது. இருப்பினும், சவுதி அரேபியாவில் தயாராகிவரும் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுகின்றன. கட்டண சேனல்கள் வழியாக உள்நாட்டில் ஒளிபரப்பாகின்றன.

யூடியூப் யுகத்தில் சினிமாக்கள் மீது தடை விதிப்பது பொருத்தமற்ற செயல் என அங்குள்ள இளம் தலைமுறையினர் கருதிவரும் நிலையில், தீவிரவாத சித்தாந்தங்களை அழித்து, புதிய சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் இஸ்லாமிய மதவாத நாடாக சவுதி அரேபியாவை மாற்ற பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அறிவித்தார்.
இதைதொடர்ந்து, அங்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இதன் ஒருகட்டமாக, வெபல்லாண்டு காலமாக சினிமாக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு இன்று நீக்கியுள்ளது. வெகு விரைவில் தணிக்கை குழு அமைக்கவும் வரும் மார்ச் மாதத்துக்குள் புதிய திரையரங்கங்களை திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சவுதி அரேபியாவின் கலைசார்ந்த பொருளாதாரத்தின் புதிய அத்தியாயமாக இருக்கும் என அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அவாத் அல்அவாத் குறிப்பிட்டுள்ளார்.