3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

அதிமுகவைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேருக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக சபாநாயகர் தனபால் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில்  டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:  கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தமிழக சட்டசபை சபாநாயகர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அந்த நோட்டீஸில் 7 நாட்களுக்குள் விளக்கம் கோரி உள்ளார். அவர் எங்களை தகுதி நீக்கம் செய்யும் வாய்ப்பு உள்ளது.

கடந்த 30-ந் தேதியன்று எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

எங்களுக்கு இப்படி நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது. அவர் பாரபட்சமாக செயல்படுகிறார்.

ஏற்கனவே துணை முதல்வர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான 10 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக வாக்களித்தும் அவர்களை இதுவரை தகுதிநீக்கம் செய்யவில்லை.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருக்கும் போது இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது.

இது தொடர்பாக முன்பு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறி உள்ளது. பெருவாரியான உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்த சபாநாயகர் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க முடியாது.

எனவே சபாநாயகர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

மேலும் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக சபாநாயகர் மற்றும் தமிழக அரசு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.