பள்ளி, கல்லூரிகளில் அரசு விழாக்கள் நடத்த உயர்நீதிமன்றம் தடை..


அரசு பள்ளி, கல்லூரிகளில் எந்தவிதமான அரசு விழாக்களையும் நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இது போன்று அரசு விழாக்களை பள்ளி, கல்லூரிகளில் நடத்துவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறுதிக் கட்டத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளதால், பொருட்காட்சிக்கு தடை விதித்தால், அரசுப் பணம் வீணாகி விடும் என்றும் எனவே இந்த பொருட்காட்சி நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

இருந்தபோதிலும், இதுவே கடைசி விழாவாக இருக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில், அரசுப் பள்ளி கல்லூரிகளில், இது போன்ற அரசு விழாக்களை நடத்த அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.