கரையைக் கடக்கும் கஜா: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கஜா புயல் எச்சரிக்கையின் எதிரொலியாக தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

கஜா புயல் இன்று கரையைக் கடக்கவுள்ளதால், கடலூர் திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக, திருவள்ளுவர் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் ஆகியவற்றின் உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்துக்குள்பட்ட புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், அந்தமான் நிகோபார் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்று கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசிய கஜா புயல், படிபடியாக மணிக்கு 8 கி.மீ. ஆக குறைந்து வருகிறது.