சேகர் ரெட்டியிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் பெற்றார்களா?: டைம்ஸ் நவ் வெளியிட்ட உண்மை


ஓபிஎஸ் கூட்டாளியான சேகர் ரெட்டி வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையின் போது 33 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் டைரி, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த சேகர் ரெட்டி தற்போது ஜாமினில் வெளியில் இருக்கிறார்.

இந்த நிலையில் சேகர் ரெட்டி டைரியில் இருந்த ஓபிஎஸ் குறித்தான விவரங்களை தி வீக் ஆங்கில வார பத்திரிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அந்த டைரி குறித்து காலை முதல் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் சேகர் ரெட்டி தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்தது போன்று ஒரு போலியான தாள் சமூக வலைதளத்தில் வலம் வந்தது.

இதை யார் வெளியிட்டது என்பது குறித்த உண்மை செய்தியை இரவு 10 மணிக்கு டைம்ஸ் நவ் ஒளிபரப்பியது. அதில், அந்த போலி தாளை ஓபிஎஸ் மகன் ரவி , ஐடி பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தயாரித்து, அதிமுக குழுக்களுக்கு பரப்பியதாகவும் செய்தி வெளியிட்டது. மேலும் அதிமுக ஐடி பிரிவின் பிரசாந்த் அந்த போலித் தாளை தயாரித்தது குறித்து ஆடியோவையும் வெளியிட்டு இருக்கிறது.

இதன் மூலம் அதிமுகவின் உண்மை முகம் வெளிக் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.