சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள அமைச்சர்கள் பதவிகளில் தொடர்வது நல்லதா?:மு.க.ஸ்டாலின் பேட்டி


செய்தியாளர்: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறதே?

ஸ்டாலின்: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் மட்டுமல்ல, வீக் இதழிலும் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. இதை ஒரு புதிய செய்தியாக நான் கருதவில்லை. காரணம், நான் தொடக்கத்தில் இருந்தே மணல் மாஃபியா சேகர் ரெட்டி கும்பலுடன் ஓ.பன்னீர்செல்வம் எந்தளவுக்கு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

 

மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோது பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் ஓபிஎஸ் மற்றும் குட்கா புகழ் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 8 அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆதாரங்களோடு தெரிய வந்தது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது மேதகு கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, முழுமையான உண்மைகள் வெளிப்பட வேண்டுமென்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் திமுக கோரியுள்ளது.

செய்தியாளர்: ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா விவகாரத்தில் சேகர் ரெட்டியின் டைரியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவிகளில் இன்னும் தொடர்வது தமிழகத்துக்கு நல்லதா?

ஸ்டாலின்: அதனால்தான், இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாக உள்ளது. இந்த அரசு ஒரு ‘குதிரை பேர’ அரசாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்குமுன் பொறுப்பிலிருந்த கவர்னரிடம் இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்திருந்தோம். இப்போது புது கவர்னர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் நாங்கள் நீதிமன்றத்துக்கும் சென்றிருக்கிறோம்.

நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். ’குதிரை பேர’ அதிமுக அரசில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாக பலமுறை நாங்கள் கூறி வந்தோம், அதனை உறுதிப்படுத்தும் வகையில் ‘தி வீக்’ மற்றும் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்திகள் வருகின்றன. அதனடிப்படையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர்: புது கவர்னரை சந்தித்து மனு கொடுக்கும் திட்டம் ஏதாவது இருக்கிறதா?

ஸ்டாலின்: தேவைப்பட்டால் புதிய கவர்னரை நிச்சயமாக சந்திக்கும் சூழல் வரும்.

செய்தியாளர்: சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்தவித தொடர்புமில்லை, அவர் யாரென்றே தெரியாது என்று பொதுமேடையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளதுடன், மற்ற அமைச்சர்கள் அப்படி ஒரு டைரியே கிடையாது என்றும் தெரிவித்து வருகிறார்களே?

 

ஸ்டாலின்: அப்படி அவர்களுக்குள் உண்மையாகவே தொடர்பு இல்லையென்றால், செய்தியை வெளியிட்டுள்ள தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை மீது வழக்கு தொடரட்டும்.
செய்தியாளர்: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறதே?

ஸ்டாலின்: ஏற்கனவே நடைபெற்ற 89 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் சூழல் வந்துள்ளது. எனவே, இப்படிப்பட்ட செய்திகள் வந்தவுடன் தேர்தல் ஆணையம் முறைப்படி செயல்பட்டு அதையெல்லாம் தடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

செய்தியாளர்: மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக நீங்கள் இருந்தபோது ஆர்.கே.நகர் தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என்று முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறாரே?

 

ஸ்டாலின்: 1996-2001 காலகட்டத்திலும், பிறகு இரண்டு ஆண்டுகள் நான் மேயராக பொறுப்பேற்றபோதும், முதல் நிகழ்ச்சியாக ஆர்.கே.நகரில் ஆய்வு நடத்தும் பணியில் தான் முதலில் ஈடுபட்டேன். எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் எங்கெங்கு சிமெண்ட் சாலைகள் போடப்பட்டுள்ளன,

 

தண்டையார்பேட்டையில் உள்ள டிபி மருத்துவமனை எந்தளவுக்கு சீர்படுத்தப்பட்டன என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். அதுமட்டுமல்ல, சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதேபோல, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஆர்.கே.நகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றன.

 

ஆனால், நேற்றைய தினம் பிரசாரத்தில் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர், ‘இனிமேல் இந்த தொகுதியை நாங்கள் தத்தெடுத்துக் கொண்டு பல பணிகளை நிறைவேற்ற போகிறோம்”, என்று சொல்லி இருக்கிறார்கள். அதன் மூலமாக கடந்த 10 ஆண்டுகளாக எந்தப் பணியையும் நிறைவேற்றவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

செய்தியாளர்: ஓகி புயலால் கன்னியாகுமரி மக்கள் தவித்து வரும் நிலையில் முதலமைச்சர் அங்கு செல்லாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாரே?

ஸ்டாலின்: அது தொடர்பாக நான், “உடனடியாக அவர்கள் கன்னியாகுமரிக்கு சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதுடன், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று ஏற்கனவே அறிக்கை விடுத்துள்ளேன். நேற்றைய தினம் கூட மாண்புமிகு பிரதமருக்கு, பேரிடர் மாவட்டமாக கன்னியாகுமரியை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

இதை ஏற்கனவே நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். ஆனால், முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் எத்தனை பேர் உயிரிழந்து இருக்கிறார்கள், எவ்வளவு பேர் காணாமல் போயிருக்கிறார்கள் உள்ளிட்ட எந்தவொரு புள்ளி விவரங்களையும் குறிப்பிடவில்லை. எனவே, அதுகுறித்த கணக்கை முறையாக எடுக்கவில்லை என்பதே எனது கருத்து.