அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோபத்தின் உச்சிக்கே சென்ற செரீனா!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, செரீனாவை வீழ்த்தினார்.

நியூயார்க்கில் நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதியில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவை வீழ்த்தி அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா. 

 

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6-2, 6-4 எனும் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா வெற்றி பெற்றார். இதன் மூலம் கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் எனும் பெருமை பெற்றுள்ளார் ஒசாகா. 

 

இந்த போட்டியின் போது செரினாவுக்கும் நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு சர்ச்சையுடன் முடிந்தது. 

 

இரண்டாவது செட்டை செரினா விளையாடும் போது அவரது பயிற்சியாளர் கைகளால் அடிக்கடி சைகை செய்தார். அதனை விதிமீறல் என நடுவர் கண்டித்தார். ஆனால் செரினா, தனது பயிற்சியாளர் கைகளால் வெற்றி பெறு என என்னை நோக்கி தம்ஸ் அப் மட்டுமே காட்டினார், ஏமாற்றி வெற்றி பெருவதற்கு பதில் நான் தோற்றுவிட்டே செல்வேன் என பதிலளித்தார். ஆனால், அதை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

பின்னர், அவரது டென்ன்ஸ் பேட்டை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இது மீண்டும் விதிமீறலாகி ஆட்டத்தில் செரினாவின் புள்ளி குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மைதானத்திலேயே கடினமான வார்த்தைகளை பயன்படுத்த அவரை அமெரிக்க ஓபன் டென்னிஸ் அதிகாரிகள் வந்து சாந்தப்படுத்தினர்.

 

இந்த சர்ச்சைகளுக்கு பிறகு இரண்டாவது  செட்டை தொடர்ந்த செரினா 6-4 என ஒசாகாவிடம் பறிகொடுத்தார். 

 

தனது முன்மாதிரி செரினா தான் என அடிக்கடி கூறிய ஒசாகா, தற்போது அதே செரினாவை வீழ்த்தி கிராண்ட்சிலாம் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார்.

Serena Williams bested by Osaka in US Open Women’s Final