ஜெயமோகனையும், எஸ்.ராமகிருஷ்ணனையும் இப்படித்தான் கடக்கிறோம் ஸ்ரீ நேசன்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

Shankarramasubramaniyan’ articleshankarraman

_______________________________________________________________________________________

 

jayamohanதமிழ் நவீன இலக்கியத்தில்  ‘பெருஞ்சக்தி’யாக, ஒரு ஏகாதிபத்தியமாக புனைவெழுத்தாளர்கள், இலக்கிய விமர்சகர்கள், கோட்பாட்டாளர்கள், இதழியலாளர்கள், இளம்தலைமுறை வாசகர்கள் வரை பெரும் தாக்கத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தியவர் என்று எழுத்தாளர் ஜெயமோகனைச் சொல்லலாம். அவர் எழுதிய விஷ்ணுபுரத்திற்குப் பிறகுதான், தமிழ் நாவலாசிரியர்களுக்கான காகிதக் கொள்முதல் கூடியது. சுந்தர ராமசாமி, தனது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலை, வீட்டின் எடைத்தராசில் வைத்து திரும்பத்திரும்ப நிறுத்துப் பார்த்து, விஷ்ணுபுரத்தை விடக் கூடுதலாக ஐம்பது கிராம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

 

 தமிழ் நவீன இலக்கியத்திற்குள் வரும் எழுத்தாளச் சிறுவர்கள், ஆயிரம் பக்கத்தில் ஒரு ஐநூறு வருட வரலாற்றை எழுதப்போகிறேன் என்று சொல்லத் தொடங்கினர். வாழ்நாள் முழுக்க எழுதியிருந்தாலும் முன்னூறு பக்கத்தைத் தாண்டி எழுதுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் வருடம் தோறும் ஸ்பைனாக் சாப்பிட்டு பத்து பத்து என்று பஸ்கி எடுக்க வேண்டியிருந்தது. ‘முடியலை’ என்று எழுத்தாளர்கள் தனியறையில் புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.s.ramakrishnan

 

 ஆனால் தமிழில் ஜெயமோகன் என்ற பெரும்புயலின் செல்வாக்கையும்  அந்தச் செல்வாக்கின் மீதான பிரமிப்பையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதது நவீன கவிதை இயக்கமும் நவீன கவிஞர்களும் தான். தமிழின் நவீன கவிஞர்கள், ஜெயமோகனையும் எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களையும் எப்படிக் கடந்தார்கள், எப்படிக் கடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைச் சூசகமாகச் சொல்லும் கவிதையை ஸ்ரீநேசன் எழுதியிருக்கிறார். காலச்சுவடின் 200-வது சிறப்பிதழில் வெளியாகியுள்ளது ஜெயமோகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் குறித்த வரையறையும் இதுவே. கவிதை சொல்லியின் தாளாளர் நண்பர் ஏன் மௌனியை, சுந்தர ராமசாமியை, ஏன் ந. பிச்சமூர்த்தியை, ஏன் எம்.வி.வியை, ஏன் ப.சிங்காரத்தைக் கேட்கவேயில்லை….

 

இன்னும் பல திருப்பங்கள் வரும் ஸ்ரீநேசன். அந்தக் கல்வி நிறுவனத் தாளாள நண்பர் அடுத்து சிறுகதைகள் எழுதலாம். எழுத்தாளர்களைக் கல்லூரிக்கு அழைத்து அபூர்வ விலங்குகள் மற்றும் பறவைகளின் கறிவிருந்தைப் படைத்து விருதுகளையும் கொடுக்கலாம்…அவர் எழுதும் படைப்புகளுக்கு ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும் மதிப்புரைகளும் எழுதலாம்…

 

ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களும் எங்கே இறங்கியிருக்கிறார்கள்?

வாழ்வமைவு

 

-ஸ்ரீநேசன்

 

 

என்னொரு நண்பன்

எங்கள் வயதே எங்கள் நட்புக்கும்

 எம் கனவுகள் அன்றாட விருப்பங்கள்

இளமைத் தொட்டே வேறுவேறானவை

ஸ்ரீ நேசன்
ஸ்ரீ நேசன்

 

சற்று முரண்பட்டவையும் கூட

பதின்மத்தின் தொடக்கநிலை

 சிறுவர்கள் நாங்கள் அன்று

 சிறுகுன்றின் பறவைப்பாறையில் இருந்தோம்

கடிவாளமற்ற கற்பனைக்குதிரை

களிப்பில் கனைத்துக் கிளம்பியது

ஒரு கைச் சொடுக்கில் பாறை

எனக்குப் பறக்கும் கம்பளமாய் விரிய

அவனுக்கோ புதையல் பெட்டகமாய் திறந்தது

அடிப்படை ஆசைகள் ஆளாளுக்கு வேறுதான்போல

புத்தகம் படிப்பதில் நானும்

நோட்டை ஈட்டுவதில்

அவனும் நாட்டமாய் வளர்ந்தோம்

இருபதில் ஒரு சர்ச்சை

பின் நிறைவேறவும் செய்தது

இன்றவன் ஒரு கல்வி நிறுவனத்தின் தாளாளர்

நானும் சில கவிதைகளை எழுதிவிட்ட கவிஞன்

திருமணப் பேச்சில்

பள்ளிப் படிப்பிருந்தால் போதுமென்றேன்

எனக்கு மனைவியோ பட்டங்கள் பெற்றமைந்தாள்

பட்டம் பெற்றவளையே மணப்பேன்

என்றவன் கனவோ பலிதமின்றி நிகழ்ந்தது

எனக்குப் பெண் குழந்தைகள் மீதே விருப்பம்

அதுபோல் அவனுக்கும்

ஆண் பிள்ளைகள் மீதிருந்திருக்கலாம்

எங்கள் தீர்மானம் ஏதுமின்றியே

அவனுக்கு இருவரும் பெண்மக்கள்

எனக்கோ முரண்பட ஆண்மக்கள்

இதோ ஐம்பதைத் தொட்டிருக்கிறோம்

கனவு காண்பதை நிறுத்திக்கொண்ட எனக்கு

நேற்றிரவு ஒரு கனவு

மலையடிவாரக் கிராமத்தில்

மூன்று ஏக்கர் நிலம் வாங்கி

கல்லூரி ஒன்றைத் தொடங்கியிருந்தேன்

விடிந்ததும் விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள

நினைத்திருந்த என்னை அவன் முந்திக்கொண்டான்

ஐம்பதாம் பிறந்த நாளுக்கு எஸ். ராமகிருஷ்ணனின்

ஐந்து நூல்களைப் பரிசளித்தாராம் நண்பர்

மூன்றை முடித்துவிட்ட பரவசத்தில் பேசிக்கொண்டிருந்தவன்

ஜெயமோகன் யாரென்றும் வெண்முரசு இருக்கிறதாவென்றும்

கேட்டுத் துளைத்து விட்டான்

மனிதனின் விருப்பங்களை நோக்க வியப்பாக இருக்கிறது

வாழ்வின் திருப்பங்களைக் காண திகைப்பாய் இருக்கிறது. 

 

___________________________________________________________________________