எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சிவகாசி சிவசங்கரி..

sivakasi woman handed over 8.50 lakh rupees to textiles owner with honestly


எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சிவகாசி சிவசங்கரி!
சிவகாசி ஜவுளிக்கடையில் துணி எடுக்கச் சென்றபோது, தவறுதலாக கிடைத்த எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை, பத்திரமாக கடை உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தை சேர்ந்த தையல் தொழிலாளியான சிவசங்கரி, தனது அண்ணன் மகளுடன் தையல் பணிக்கான துணிகளை வாங்குவதற்காக சிவகாசி தெற்கு ரத வீதியில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றுள்ளார்.

துணிகளை தேர்வு செய்துவிட்டு, சிவசங்கரி பணத்தைக் கொடுக்க, துணிப்பைக்குப் பதிலாக, கரன்ஸிக் கட்டுக்கள் இருந்த பையைக் கடை உரிமையாளர் தவறுதலாகக் கொடுத்துள்ளார். வீட்டுக்கு வந்த பிறகு, பை மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவசங்கரி உடனடியாக பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்து, தனது அண்ணனை துணைக்கு அழைத்துக்கொண்டு ஜவுளிக்கடைக்கு கிளம்பினார்.

அதற்குள், பணப்பை காணாமல் போனது குறித்து, சிவகாசி டவுண் காவல் நிலையத்தில், ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜ்குமார் தகவல் தெரிவிக்க, உடனடியாக வந்த காவல்துறையினர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய ஆரம்பித்தனர்.

அந்த நேரத்தில் ஜவுளிக்கடைக்கு வந்த சிவசங்கரி, நடந்த விவரங்களை கடை உரிமையாளரிடம் கூறி, எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்தார். சிவசங்கரியின் இந்த நேர்மையைக் கண்டு கடை உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்கள் பாராட்டினர்.

இதுகுறித்து சிவசங்கரி கூறுகையில், தான் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் வயிற்றுப்பிழைப்பிற்கு தையல் வேலை பார்த்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறேன்.
இந்தப் பணம் பெரிய தொகையாக இருந்தாலும் தான் உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே நமக்கு சொந்தம். மற்றவர்களின் பணம் தமக்கு தேவையில்லை என்பதால் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்தியதாக சிவசங்கரி நேர்மையுடன் கூறுகிறார்.
பணத்தை திருப்பி செலுத்தும் வரை தனக்கு பணம் மிகுந்த பாரமாக இருந்த நிலையில் பணத்தை திருப்பி செலுத்தியவுடன் மனதில் உள்ள பாரங்கள் குறைந்து மிகுந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதாகவும் சிவசங்கரி தெரிவித்துள்ளார்.

சிவசங்கரியின் இந்த செயலுக்கு காவல்துறையினர், பொதுமக்கள் என பலவேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.