சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு..

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் தொழிலாளர் சேமநல நிதியும் (பிபிஎப்) இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலைய சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பிபிஎப் ஆகியன ஏறக்குறைய முற்றிலும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்திற்கு பதில், 8.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது.

இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டின் போதும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சேமிப்பு வைப்பு தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகவே இருக்கும்.

பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிஷான் விகாஸ் பத்திர வட்டிவிகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

கிஷான் விகாஸ் பத்திரம் நிறைவடையும் காலம் 112 மாதங்களுக்கு பதிலாக 111 மாதங்களாக குறைக்கப்படுகிறது.

பெண் குழந்தை சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி 8.1 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.