ஸ்மார்ட்போன்களில் ஆதார் தொலைபேசி எண் விவகாரம் : கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது..


ஸ்மார்ட் போன்களில் ஆதார் மைய உதவி எண்கள் தானாக பதிவானதாக திடீர் சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பலரும் கடுமையான விமர்சனத்தை எழுப்பி இருந்த நிலையில், இதுகுறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

நாட்டின் அனைத்து குடிமக் களுக்கும் ஆதார் எண் வழங்கும் பணியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) செய்து வருகிறது.

ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வசதியாக நாடு முழுவதும் சேவை மையங்கள், இணையதளத்தில் திருத்தம் செய்ய வசதிகளையும் யுஐடிஏஐ செய்துள்ளது.

இந்த நிலையில் யுஐடிஏஐ-யின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800-300-1947 என்ற எண் மாற்றப்பட்டு 1947 என்ற புதிய தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் கட்டணமில்லா சேவையே ஆகும்.

இதைத் தொடர்ந்து இந்த புதிய எண்ணானது ஸ்மார்ட்போன்களில் உள்ள கான்டாக்ட் லிஸ்ட்டில் தானாகவே பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ட்விட்டர் அக்கவுன்ட் வைத்துள்ளவர்கள், ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும்போது இந்த புதிய எண் தானாகவே, அவர்களது ஸ்மார்ட்போன்களில் பதிவாகியுள்ளது.

ஆதார் எண்ணைப் பெற்றவர்களுக்கும், ஆதார் எண்ணைப் பெறாதவர்களுக்கும் ஸ்மார்ட் போன்களில் இந்த எண் தானாகவே பதிவாகியுள்ளது. இதனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.