கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..


பிரதமரை கொல்ல சதி செய்ததாக கூறி கைது செய்யப்பட்ட 5 சமூக ஆர்வலர்களை வீட்டுக்காவலில் வைக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக கூறி மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவ்லகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும் வக்கீலுமான சுதா பரத்வாஜ், வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோர் மகாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று மாலை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் செப்டம்பர் 5-ம் தேதி வரை வீட்டுக்காவலில் மட்டும் வைக்கும்படி உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அரசு மற்றும் தொடர்புடைய விசாரணை அமைப்புகள் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.