தென் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்..

தென் தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு, சேரன்மாதேவி, தேவக்கோட்டை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் தலா 2 செண்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.