தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே மழை: வானிலை மையம்..


தமிழகத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, இரண்டு நாள்களுக்கு முன்னர் வரை தீவிரமாக இருந்தது. தமிழகம் முழுமைக்கும் நல்ல மழை பொழிவை இந்த பருவமழை தந்தது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை நீடித்தது. இந்நிலையில், தற்போது மழைப் பொழிவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது. மாநிலத்தின் பெரும்பான்மையான இடங்களில் நேற்று வறண்ட வானிலையே காணப்பட்டது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம், `அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு கேரளப் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அங்கிருந்து நகர்ந்துவிட்டது. அந்தமானை ஒட்டியுள்ள மலேசிய கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும்’ என்று தகவல் தெரிவித்துள்ளது.