என்னை கொல்ல இந்திய உளவுத்துறை அமைப்பான “ரா“ சதி : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு..

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொல்ல சதி செய்தது என்று இலங்கை அதிபர் சிறிசேனா பகிரங்கமான குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்து வருபவர் மைத்திரி பால சிறிசேனா.

இலங்கையில் வாரம் தோறும் நடக்கும் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் சிறிசேனா பேசும்போது,

“என்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான “ரா” சதி செயலில் ஈடுபட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது.

ஜனாதிபதி சிறிசேனா இவ்வாறு கூறியதும் கூட்டத்தில் பங்கேற்ற மந்திரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ‘ரா’ அமைப்பு எத்தகைய வழிகளில் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கிறது என்பதை சிறிசேனா வெளியிடவில்லை.

அதிர்ச்சியூட்டும் இந்த தகவல் பற்றி கூடுதல் தகவல்கள் அறிய பல்வேறு பத்திரிகையாளர்களும் இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர்.

ஆனால் இலங்கை ஜனாதிபதி அலுவலகம் சார்பில் உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை.

இலங்கை அரசியல் தலைவர்கள் அடிக்கடி இந்திய உளவு அமைப்பான “ரா” மீது குற்றம் சாட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

2015-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததும் இந்திய உளவு அமைப்பு ‘ரா’ மீதுதான் ராஜபக்சே குற்றம் சாட்டினார்.

சிறிசேனா குற்றச்சாட்டினால் இந்தியா இலங்கை இடையிலான நல்லுறவு பாதிக்கப்படும் என உயர் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விரைவில் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

இந்த சூழ்நிலையில்தான் அந்நாட்டு அதிபர் சிறிசேனா இது போல் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.