20 ரூபாய் தினகரன் எங்களை விமர்சிப்பதா?: ஸ்டாலின் நறுக்

ஆர்கே நகர் மக்களால் 20 ரூபாய் தினகரன் என்று அழைக்கப்படும் நபர், திமுகவை விமர்சிப்பது நகைப்புக்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தலைச் சந்திக்க அஞ்சி, அதனை நிறுத்துவதற்காக அதிமுகவும், திமுகவும் முயற்சித்து வருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டி இருந்தார். அதிலும், உச்சநீதிமன்றத்தில் திருவாரூர் இடைத்தேர்தலுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருக்கும் மாரியப்பன் என்பவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் விசாரித்து அறிந்திருப்பதாக தினகரன் பேட்டியில் கூறியிருந்தார்.

டிடிவி தினகரனின் இந்தக் கருத்து பற்றி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த ஸ்டாலின், தேர்தலைக் கண்டு தி.மு.க பயப்படுவதாக டி.டி.வி.தினகரன் கூறுவது நகைப்புக்குரியது. ஆர்கே.நகரில் எம்.எல்.ஏ தினகரன் எனச் சொல்லமாட்டார்கள். 20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கிறார்கள். நேர்த்திக்கடன் போன்று வாரம்தோறும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திப்பவர் தினகரன். திருவாரூர் கலைஞரின் மண் என்பதால் தி.மு.க எதற்கு பயப்படவேண்டும்?” எனத் தெரிவித்தார்.