கர்நாடக பயணம் ரத்து; நாளை தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்..

ஸ்டெர்லைட் கலவரம் காரணமாக, நாளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, நடைபெற்ற போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.

கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நாளை பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு பங்கேற்கப் போவதில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அங்கு செல்கிறேன்.
தூத்துக்குடியில் இன்னும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. முதலில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

அதன்பின்னர் கோட்டையில் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம். தமிழக அரசியலில் இதுவரை நேராத கொடுமை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.